கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் நேற்று இரவு(14) சில வீடுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கனகராயன்குளம் குறிசுட்ட குளத்தில் உள்ள சில வீடுகளில் தொலைபேசி மற்றும் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட போது பொது மக்களால் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டு நன்றாக கவனிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கனகராயன்குளத்தில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சமயம் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
53 வயதான பிரியதர்ஷினி கனகரெத்தினம் என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான், சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் சிறிதரன் ராஜேஸ்வரி (வயது 68) சக்திவேல் ராஜகுமாரி (வயது 74) ஆகிய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மூதூர் தாஹா நகர் பகுதியைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவமாதாக கடமையாற்றிவரும் சிறிதரன் தர்ஷினி என்பவருடைய வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினமான நேற்று (14) அதிகாலை சிறிதரன் தர்ஷினி மூதூர் வைத்திய சாலையில் வியாழக் கிழமை இரவுக் கடமைக்காக சென்றிருந்த நிலையில் குறித்த வீட்டில் 15 வயதான அவரது மகள், தாயாரான சிறிதரன் ராஜேஸ்வரி மற்றும் பெரியம்மாவான சக்திவேல் ராஜகுமாரி ஆகியோர் மாத்திரம் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை வேளை குறித்த கொலை இடம் பெற்றுள்ளதாகவும் குறித்த படுகொலைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இருவருடைய கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு இருவரும் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகள் சிறு காயங்களுடன் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் போது குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அம்மம்மா தனக்கு ஒரே பேசுவதாகவும், தன்னில் பாசம் இல்லை எனவும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்ததாகவும் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன் பின்னர் குறித்த சிறுமி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உரையின் போது (08) முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள செய்தியில் ,
மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்கள் குறித்து போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்கி, குறிப்பிட்ட நம்பிக்கைகளை பின்பற்றி வாழும் சமூகத்தின் மத உணர்வுகளை தூண்டும் நிலையை உருவாகக் கூடும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத வகையில் மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பாக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறான மத சார்ந்த முக்கியமான விடயங்கள் தொடர்பாக பொது மன்றங்களில் கருத்து வெளியிடும் போது, மிகுந்த நாகரிகத்தோடும், தெளிவோடும், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் நடந்து கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.
மருத்துவர் அர்ச்சுனா உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மதங்கள் பற்றிய முக்கியமான விடயங்களில் தேவைப்படுமாயின் அவற்றை பேசுமுன், அந்தந்த மதங்களின் உயர்பீடங்களிடம் தெளிவு பெற்ற பின்னரே கருத்து தெரிவிப்பது முறையாகும்.
அவ்வாறே இஸ்லாத்தை பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு, முறையாக தெளிவு பெற்றுக் கொள்ளுமாறு வினயமாக கேட்டுக் கொள்வதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.
குறித்த முகாம் நிலத்துக்கு அடியிலேயே அது அமைந்துள்ளது. எல்லோருக்கும் இருப்பது ஒரே ஒரு மலசலகூடம். அது வர்த்தமானிப் படுத்தப்பட்ட சிறையும் அல்ல. மனிதன் ஒருவனை தடுத்து வைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றது.
தற்போது வெளிநாடொன்றில் தஞ்சமடைந்திருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி திரு நிஸாந்த டீ சில்வா, திருகோணமலை ‘கன்சைட்-Gun Site’ வதை முகாமை இவ்வாறு அடையாளம் காட்டியிருந்தார்
அதே போல ஐ.நா.வின் குழுவொன்றும் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மற்றும் ரியல் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆயோயோரின் துணையுடன் கடற்படையால் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் இயக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்திருந்தது
குறிப்பாக கடற்படையை சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர்களான சம்பத் முனசிங்க, ஹெட்டியாராட்சி ஆகியோர் தலைமையிலான குழுவால் கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் ‘கன்சைட்-Gun Site’ வதை முகாமில் தடுத்து வைத்து கொ*ன்றமைக்கு ஆதாரங்கள் இருக்கின்றது
அதே போல ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுடன் கோத்தபாயா ராஜபக்சே தொடர்பில் இருந்தார் என்பதை International Truth and Justice Project (ITJP) உறுதிப்படுத்தி இருந்தது.
இது தவிர கிழக்கு மாகாண கட்டளை அதிகாரியாக இருந்த எஸ் எம் பி வீரசேகர , பிரதி கட்டளை அதிகாரியாக இருந்த சிசிர ஜெயக்கொடி போன்றவர்களுடன் கோத்தபாயா ராஜபக்ஷே அவர்களும் ‘கன்சைட்-Gun Site’ செல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதும் அம்பலப்படுத்தப்பட்டு இருந்தது.
திருமதி யஸ்மின் சூக்காவின் ‘கன்சைட்-Gun Site’ அமைந்திருந்த இடம், அதன் அதிகாரிகள், சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள், உட்பட்ட பல தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தது
இங்கு குறைந்தது 700 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
விசேடமாக யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட பலரும் பருத்தித் துறையிலிருந்து படகுகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது
அச்செழு இராணுவ முகாம், ஜோசப் இராணுவ முகாம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலைய பயங்கரவாத புலனாய்வு திணைக்களம், பூசா தடுப்பு முகாம், கபரண இராணுவ முகாம், வெலிகந்த முகாம் என தமிழர்களை வேட்டையாடிய வதை முகாம்களில் ‘கன்சைட்-Gun Site’ முக்கியமானது
கொழும்பில் பணத்திற்க்காக கடத்தி காணாமலாக்கப்பட்ட ராஜீவ் நாகநாதன் என்கின்ற மாணவர் ‘கன்சைட்-Gun Site’ முகாம் தடுப்பிலிருந்தவாறு தன் தாயாரோடு பேசிய சந்தர்ப்பத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்திருக்கின்றார்
குறிப்பாக அங்கு சுமார் 18 முதல் 20 வயதுடைய பல இளைஞர் யுவதிகள சுட்டு படுகொலை செய்கின்றனர் என்பதையும் அங்குள்ள கழிவறை எங்கும் இரத்தக்கறை பரவியிருந்ததையும் சொல்லியிருக்கின்றார்
2015 இற்கு பின்னர் ‘கன்சைட்-Gun Site’ முகாம் கொடுமைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் அம்பலமாகி விட்ட பின்னரும் வசந்த கரன்னகொட உட்பட யாரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை
திரு மைத்திரிபால சிறிசேனா முதல் திரு ரணில் விக்ரமசிங்கே வரையான ஆட்சியாளர்கள் சகல குற்றவாளிகளையும் பாதுகாத்தார்கள்
இது போதாதென்று இன்றைக்கு ‘பட்டலந்த வதை முகாம்’ குறித்து பேசும் ஜேவிபி ‘கன்சைட்-Gun Site’ வதை முகாம் சூத்திரதாரிகளில் ஒருவரான கடற்படை தளபதி சிறிமேவன் சரத் சந்திர ரணசிங்க அவர்களை துறைமுக அதிகார சபையின் தலைவராக நியமித்துள்ளது
இந்த ஜேவிபி இன்று இலங்கையராக ஒன்றுபடுமாறு எங்களுக்கு அழைப்பு விடுகின்றது. 20 நாட்களாக பொலிஸ் மா அதிபரை ஒழித்து வைத்து நாடகமாடும் ஜேவிபி தன் நிர்வாக பலவீனங்களை மறைக்க பட்டலந்த அறிக்கையை வைத்து வேஷம் போடுகின்றது
இவர்கள் எங்களுக்கு மட்டுமின்றி யாருக்கும் நீதியை பெற்று தர மாட்டார்கள்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக இன்று (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். எஸ்.பீ. சூரியபெரும தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்தியாக இருந்தால், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை வெளியிடுவதற்காக மாத்திரம் இன்று சனிக்கிழமை ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் திறந்திருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் கோரிக்கை முன்வைக்காத இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை பத்திரத்தை எடுத்து வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழைச் சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.
சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம் பெற்றுள்ளதாகவும் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் காங்கேசன்துறை வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவானது நேற்று (14) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு, மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் போது, சமூக மட்டத்தில் இவரது செயற்பாடுகள் சர்ச்சைக்குரிய நிலையிலும் பல குற்றச்சாட்டுகளுடன் இருப்பதாலும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
ஊடகங்களுக்குப் பேசிய அவர், சமீப நாட்களாக அமைதியாக இருந்தமையானது நாமல் ராஜபக்ஷவுடன் கிராமம் கிராமமாகச் சென்று அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் நினைவு கூர்ந்தார்.
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்று தான் நம்புவதாகவும், மஹிந்த ராஜபக்ஷ முகாமின் அடுத்த தலைவராக எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ஷவுடன் பயணிக்க விரும்புவதாகவும் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியுடன் நாடு பின்னோக்கிச் சென்றதாகவும், அவர்கள் மீது தவறான முத்திரைகள் ஒட்டப்பட்டு, அவர்களை திருடர்கள் என்று குற்றம் சாட்டியதே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.
“கடந்த காலகட்டத்தில், நாங்கள் அமைதியாக மாவட்டங்களுக்குச் சென்று, கிராமம் கிராமமாகத் திட்டத்திற்குச் சென்று, நாமல் ராஜபக்ஷவுடன் இந்த தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.” இந்த நாட்டின் அடுத்த தலைவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ஷ தான் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் அப்போதே அப்படித்தான் சொன்னோம்.
நாட்டு மக்கள் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளையும், தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்கிறார்கள். எனவே, இந்த நாட்டிற்காக உழைத்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
இந்த நாட்டில் போரை நிறுத்திய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார். எனவே, மஹிந்த ராஜபக்ஷ முகாமின் அடுத்த தலைவராக இளைஞர் தலைவர் நாமல் ராஜபக்ஷவை வைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
“இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி ஆக்குவதற்கான எங்கள் திட்டம் இந்தத் தேர்தலிலிருந்தே உருவாகிறது” அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் அடி மட்டத்திலிருந்து தயார் செய்து வருகிறோம் என்றார்.