16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, மாணவி உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இது யாரோ வேண்டுமென்றே செய்யும் செயல் என சந்தேகிப்பதாகவும் அந்த நபர் கூறினார்.
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும் சில அரசியல் தரப்புக்களால் குறித்த விடயம் திசை திருப்பப்பட்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் இந்த விடயத்தில் இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது குறித்த மாணவியால் ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, இரண்டாவது தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் சம்பவம். ஆக இரண்டும் ஒரே சம்பவம் அல்ல இங்கு இரண்டு சம்பவங்கள் இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
முதலாவது சம்பவமானது ஆசிரியரால் மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், குறித்த சம்பவமானது கடந்த 2024ம் ஆண்டு இடம் பெற்றதாகவும் அது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கில் பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டு ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கில் மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின் குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டிருக்க மாட்டாது.
குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த மாணவி வேறு பாடசாலைக்கு விலகிச் சென்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது சம்பவம், மாணவியின் மரணத்திற்கு ஒரு சில தினங்களிற்கு முன்னர் தனியார் கல்வி நிலையத்தில் கற்றலில் ஈடுபட்டிருந்த போது குறித்த கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரால் அவமானப் படுத்தப்பட்டதாகவும், அதனால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் அவமானம் ஒன்று நிகழ்ந்திருப்பின் குற்றவாளி குறித்த கல்வி நிலைய ஆசிரியரே.
இந் நிலையில் குறித்த சம்பவம் காரணமாக ஒரு மாணவியின் உயிர் வீணே இழக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வு குறித்த மரணத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதேவேளை இதுவரை குறித்த மாணவியின் பெற்றோரால் முறைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்கள், போராட்டங்களை மட்டும் நடாத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதாவது மகளீர் விவகார அமைச்சர் நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்த போதும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கூறிய போதும் அவைகள் எதனையும் மேற்கொள்ளாது கண்டனப் போராட்டங்களை மேற்கொள்வதாலோ, சமூக வலைத்தளங்களில் எழுதுவதாலோ தீர்வையோ, நீதியையோ பெற்றுக் கொள்ள முடியாது.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், முஜிபுர் ரஃமான் உட்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்கது. எனினும் அதற்கு பின்னாலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விசமத்தனமான அரசியலை காண முடிகின்றது.
இங்கு இரண்டு சம்பவம், இரு குற்றச் சந்தேக நபர்கள், இவர்களுக்கு அப்பால் பெற்றோர், சக மாணவிகள் என்போரும் குற்றச் சந்தேக வலயத்திற்குள் உள்ளனர். இந்த நிலையில் ஒருதலைப் பட்சமாக ஆசிரியரை மட்டும் குற்றவாளிகளாக்க பல்வேறு தரப்பினரும் முயல்வதன் நோக்கம் என்ன?
குறித்த மாணவி தற்கொலை செய்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள், வீட்டில் நடந்த சம்பவம், மாணவியின் உடற்கூற்று அறிக்கை, உள்ளிட்டவைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருதலைப் பட்சமாக ஒருவரை நோக்கி கை நீட்டுவது என்பது தவறான முன்னுதாரணம்.
அதேபோல் விசாரணைகளே முடிவுறாத நிலையில் வடகிழக்கில் மட்டும் இயங்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் குறித்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் கல்வி பின் புலத்தையே ஐயப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசாரணைகள் நடைபெற்று, குற்றம் உறுதிப் படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமே தவிர விசாரணையே நடைபெறாது தண்டனை வழங்கும் நடைமுறை இலங்கைச் சட்டத்தில் உள்ளதா???
அடுத்து குறித்த மாணவி மாடியிலிருந்து கீழே விழும் வீடியோவை அவதானிக்கும் போது உடல் அசைவு இன்றியே விழுவது போன்று உள்ளதுடன், அவர்களின் பெற்றோரின் முகத்தில் அவ்வளவு கவலையை காண முடியவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே சட்டம் தனது கடமையை செய்யும், நீதித்துறை சுயாதீனமானது அதுவும் தனது கடமையை சரிவரச் செய்யும், சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி பாதிக்கக் கூடாது இதில் குற்றவாளி யார் என்பதை பொலிசாரும், நீதிமன்றமும் விரைவில் வெளிப்படுத்தும் அதுவரை உங்கள் வட்டார, குறுகிய அரசியலை ஓரங்கட்டி வைத்து விட்டு நீதிக்கு மதிப்பளித்து செயற்படுங்கள்.
வவுனியா இராசேந்திரகுளம் கிராமத்தில் நேற்றிரவு இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.24 வயதுடைய தவகுலசிங்கம் திவ்யா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நீண்ட நேரமாக அவரது வீட்டு அறையில் அமைதியாக இருந்தமையை அடுத்து வீட்டார் அறையின் கதவினைத் திறந்து பார்த்த சமயத்தில் வீட்டின் கூறையின் மேற்பகுதியில் துணியின் மூலம் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2022 அரகலய போரட்ட காலத்தில் தீ வைப்புகளினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்காக 92 முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களும் ரூ. 620 மில்லியன் இழப்பீடு பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை ஹொரண பிரதேசததில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் இன்று (03) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 மே 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது தீ வைப்புகள் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்கு இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பெப்ரவரி 6 ஆம் திகதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் சமர்பித்திருந்தார்.
குறித்த பட்டியலின் படி, 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப் பட்டிருந்ததாக அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்து விடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்.
அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகளாக மாறி மாறி பல தேர்தல் மூலம் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிட்டன ஆனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நலிவடைந்தே போகின்றது.
காலத்துக்கு காலம் ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியதும் தமிழ் மக்களை ஏமாற்றியதுமே வரலாறாக நீள்கின்றன.
பன்னாட்டு அனுசரணையோடு செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களையும் காற்றில் பறக்க விட்டதே அரசின் தொடர் கதை. அரசாங்கம் தொடர்ந்து நிலப்பறிப்பு,குடிப்பரம்பல் மாற்றம், மொழிச் சிதைப்பு ,பண்பாட்டுச் சீரழிப்பு, இனத்துவ ஏகாதிபத்திய அடக்குமுறை ,இனவாத வகுப்புவாத சிந்தனை, அரச திணைக்களங்கள் மூலம் நில அபகரிப்பு போன்ற பல்வேறு விதமான நெருக்கடிகளை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர்களால் அரங்கேற்றப்படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை சிறு பான்மையினராக்கும் முயற்சியிலே அரசாங்கம் முன் நோக்கி நகர்கின்றது. ஆட்சி அமைக்கின்ற எவரும் பௌத்த தேசியவாத மனநிலையில் இருந்தும் சிங்கள மேட்டிமை வாத சிந்தனையில் இருந்தும் தங்களை மாற்றிக் கொள்ள தயாராகவில்லை.
பௌத்த தேசிய இனவாதத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவதனால் தான் சமூக, சமநீதி, சமத்துவம், இனத்துவ மொழித்துவ வேறுபாடின்மை போன்ற விடயங்களை குறைந்தபட்ச மேனும் நோக்கு நிலையாக கொள்வதில்லை.
பௌத்த பீடங்களை திருப்திப்படுத்தவும் இராணுவத்தை மகிழ்ச்சிப்படுத்தவும் சிங்கள அடிப்படை வாதிகளை சாந்தப்படுத்தும் வேலையிலுமே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய அரசும் இதுக்கு விதிவிலக்கு அல்ல . ஆட்சிக்கு வர முன்னர் பல்வேறு விதமான இடதுசாரி தத்துவத்தை முன் வைத்தவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்த பின்னர் இயல்பான இனவாத வலதுசாரி வகுப்பு வாதிகளாக மாறி விட்டார்கள்.
நடைமுறைச் சாத்திய மற்ற வாக்குறுதிகளை எல்லாம் தாராளமாக அள்ளி வீசியவர்கள் அதில் ஒரு சிலதை கூட நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். ஜே.வி.பி யில் இருந்து என்.பி .பி என பெயரை மாற்றிக் கொண்டால் கடந்த காலத்து இனவாத சக்திகள் எதனையும் இன்றைய இளைய சமூகம் அறிந்திருக்காது என் கின்ற அற்ப ஆசையிலே இத் தந்திரத்தை உபயோகிக்கிறார்கள்.
அது தொடர்ந்தும் வெற்றியை நோக்கி முன் னகர்துமா என்பது கேள்விக்குறியே!இலங்கையிலே இனவாதத்தை பட்டவர்த்தனமாக பொது வெளியிலே சிங்கள மக்கள் மத்தியிலே வெறுப்புணர்வை தூண்டி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தியதில் மிகப்பெரிய பங்காற்றியவர்கள் ஜே.வி.பியினர் என்பது மறக்க முடியாத கடந்த கால வரலாறு.
பெயரை மாற்றி விட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என எண்ணுகிறார்கள் போலும் வடக்குக் கிழக்கில் அரச ஒட்டுக் குழுக்களாக இருந்தவர்கள் இப்பொழுது ஜன நாயகவாதிகளாக தங்களை காட்டிக் கொள்வது போல் தான் இவர்களுடைய மாய விம்பமும் தோன்றுகின்றது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட போதும் உருப்படியாக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதியும், பிரதமரும், அமைச்சர்களும் பொய்யும் புரட்டுமாக பேசி வாக்கை தமதாக்கிக் கொள்ள முனைகிறார்கள்.
மக்களே விழித்துக் கொள்ளுங்கள். தமிழின அழிப்பாளர்களான ராஜபக்சக்களின் அடக்குமுறையை கூட துணிச்சலாக எதிர்கொண்ட தமிழ் மக்கள் ஜேவிபியின் என். பி .பி நாடகத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
குறிப்பாக மன்னார் போன்ற பிரதேசங்களில் காற்றாலை மின்சாரம் ,கனிம மண் அகழ்வு, கரையோர மண்ணகழ்வு ஆகிய மூன்று திட்டங்களுக்கும் கொள்கை அளவில் அரசாங்கம் ஆதரவாகவே இருக்கிறது.
இத்திட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிக்கலாமா? வடமராட்சி கிழக்கு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 5940 ஏக்கரை கபளீகரம் செய்வதற்கு அரசாங்கம் முயல்கிறது இதை ஆதரிக்கலாமா? எனவே தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை அது விரைவில் தீர்ந்துவிடும்.
அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம். நீண்ட நெடிய விடுதலைப் போரை நடத்திய இனம் வெறும் வாய்ச்சொல் வீரர்களுக்கு வாக்களிக்க முனைவது தேசத்துக்காக இழந்த எம்மவர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது.
ஆகவே தென்னிலங்கையில் யாரும் எவருக்கும் வாக்களிக்கட்டும். வடக்கு கிழக்கிலே எங்களை நாங்கள் ஆளக்கூடிய சுயநிர்ணய உரித்தை தகவமைத்துக் கொள்வதற்கு எமது இருப்பு எமக்கு முக்கியம் அற்ப சொற்ப சலுகைகளுக்கும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கும் உங்கள் வாக்கை அளித்து வாழ்க்கையையும் இருப்பையும் இழந்து விடாதீர்கள்.
வாக்களிக்க முன் நான் ஏன் இவருக்கு வாக்களிக்க வேண்டும். அதனால் நம் இனத்துக்கும், எம் நிலத்துக்கும், என் பண்பாட்டிற்கும், அடுத்த சந்ததிக்கும் நான் மதிப்பிடும் அரசியல் கணக்கு என்ன? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் வாக்குச் சாவடிக்கு போக முன்னர் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். என்றுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (03) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் ஆளுநர் செயலக ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநர் செயலக கணக்காளர் சோ.பிரபு, ஆளுநரின் இணைப்புச் செயலாளர்களான எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா மற்றும் சர்வானந்தா, ஆளுநரின் ஊடகச் செயலர் கு.டிலீப்அமுதன் ஆகியோர் வடக்கு மாகாண பிரதம செயலரின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது 34 ஆண்டுகால அரச சேவையில் பல்வேறு கௌரவ ஆளுநர்களின் கீழ் ஆளுநரின் செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள முன்னணி மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவரை கடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது.
மகளிர் பாடசாலைக்கு முன்பாக ஒரு நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை பாடசாலை நிர்வாகம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மதியம் பாடசாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று, அந்த பாடசாலையில் இருந்து ஒரு மாணவியை அழைத்துச் செல்ல அவருடைய தாயார் காரில் வந்திருந்தார்.
அவர் தனது மகளை காரின் பின் இருக்கையில் அமர வைத்தபோது, வெளியாள் ஒருவர் வலுக்கட்டாயமாக காரின் பின் இருக்கையில் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் காரை முன்னோக்கி ஓட்டுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த நேரத்தில் மாணவியின் தாய் காரில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.
பாடசாலையின் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன் போது சந்தேக நபர் காரில் இருந்து தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் கூர்மையான ஆயுதத்தைக் காட்டி, அருகில் கூடியிருந்த கூட்டத்தினரையும் அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ள பாடசாலை நிர்வாகம், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும் போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது
பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் பல நாட்களாக பாடசாலை பகுதியில் சுற்றித் திரிந்தமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒரு நாள் சேவை உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்களை பதிவுச் செய்யும் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த திகதிகளில் ஏனைய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் கொண்டவற்றைத் தவிர, அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தமிழ் மக்களின் கணிசமான காணிகளைக் கபளீகரம் செய்யும் விதத்தில் அரசு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுவதற்கு அரசுக்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அரசு இந்த விடயத்தில் வர்த்தமானியை வாபஸ் பெறத் தவறுமானால் அந்தத் திகதிக்குப் பின்னர் தமிழ்க் கட்சிகள் யாவற்றையும் இணைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக சாத்வீக வழிமுறையில் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்று ஆரம்பம் ஆகும் என்று அறிவித்திருக்கின்றார்.
“மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அம்பலமாகியுள்ளது. இதனை அரசு கை வாங்குவதற்கு ஒரு மாத காலக்கெடு – மே 28 வரை – வழங்குகின்றோம். அந்தத் திகதிக்குள் இந்த வர்த்தமானியை அரசு கை வாங்காமல் விட்டால், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ்ப் பொது மக்களை இணைத்துக் கொண்டு அந்த வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக சாத்வீக முறையில் பெரும் சட்ட மறுப்புப் போராட்டம் ஒன்றே முன்னெடுப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.
“இது தனித்து தமிழரசுக் கட்சி முன்னெடுக்கப் போகின்ற போராட்டம் அல்ல. ஒட்டுமொத்த முழுத் தமிழினமும், தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எடுக்கப் போகின்ற போராட்டம். மூத்த – முன்னணி – தமிழ்க் கட்சி என்ற முறையில் இந்த அறிவிப்பை அதன் பதில் பொதுச் செயலாளராக நான் அறிவித்திருக்கின்றேன்.
தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்ட எழுச்சியை, தங்கள் நிலங்களைக் காப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய ஒரு தேவை வந்துள்ளது. தமிழினத்தின் கருத்தை இந்தப் போராட்டம் மூலம் முழு உலகக்கும் நாம் முன் வைப்போம்.” – என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
யாழ். ஊர்காவற்றுறையில் நேற்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் பின்னர் நையப்புடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் குறித் நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
பலர் சமரசம் செய்ய முயன்ற போதும் அதனை ஏற்க மறுத்து டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர் திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டார்.
இதையடுத்து கூடியிருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டினர். அந்தப் பகுதியில் பிரச்சார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் அந்த நபரின் இல்லத்துக்கு வானில் சென்ற சிலர் அவரை நையப்புடைத்தனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.