மாணவர்கள் மீதான தேவையற்ற சுமைகளைக் குறைக்கவும், பொறுப்புள்ள மற்றும் உலகளவில் சிந்திக்கும் குடிமக்களை வளர்க்கவும் இலங்கையின் கல்வி முறையை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டியில் உள்ள மகாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வில், கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி தேர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும், நன்கு வளர்ந்த நபர்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை துணை சபாநாயகர் கலாநிதி சாலிஹ் எடுத்துரைத்தார், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் மட்டுமே உண்மையான சட்டமியற்றுபவர்களாக மாற முடியும் என்பதை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (31) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் வகையில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
நாட்டின் அனைத்து வைத்திய சாலைகளும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளும் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து தினசரி சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சுகாதார அதிகாரிகள் நியாயமான தீர்வினை வழங்கினால், வேலைநிறுத்தம் குறித்து மீளப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு இணையாக, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்குழுவின் கோரிக்கையின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘1818’ என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலம், நாட்டின் எந்தவொரு இடத்திலும் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்துக்குரிய செயற்பாடுகள் பற்றிய சரியான தகவல்களைப் பொதுமக்கள் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடாத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பு தொடரில், 15வது கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 என மதிப்பிடப்பட்டுள்ளது.
“சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024” இன் கணக்கெடுப்புப் பணிகள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாவது வாரம் வரை மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கணக்கெடுப்பின் கணக்கெடுப்பு நேரமாக, 2024 டிசம்பர் 19 ஆம் திகதி அதிகாலை 00:00 மணி குறிப்பிடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில் பதிவான மொத்த மக்கள் தொகையை விட, இந்த முறை மக்கள் தொகை 1,403,731 அதிகமாக பதிவாகியுள்ளது.
2001-2012 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.7% ஆக பதிவாகி இருந்தது.
தற்போதைய 2012-2024 இடைப்பட்ட கணக்கெடுப்புக் காலப்பகுதியில், மக்கள் தொகையின் சராசரி வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைந்துள்ள போதிலும், மக்கள் தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
மாகாண ரீதியான மக்கள் தொகை பரம்பல்:
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 28.1% உடன் மேல் மாகாணமே அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.
மாவட்ட மட்டத்தில் மக்கள் தொகை பரம்பலை எடுத்துக் கொண்டால்:
கம்பஹா மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை வாழ்கிறனர். அதன் மக்கள் தொகை 2,433,685 ஆகும்.
அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.
2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே வசிக்கின்றனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைத் தவிர, கடந்த கால கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
குருநாகல் (1,760,829)
கண்டி (1,461,269)
களுத்துறை (1,305,552)
இரத்தினபுரி (1,145,138)
காலி (1,096,585)
இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை பதிவாகியுள்ளது.
முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இந்த முறையும் நாட்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு (122,542), மன்னார் (123,674), கிளிநொச்சி (136,434), மற்றும் வவுனியா (172,257) ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளன.
வளர்ச்சி வீதம்:
அதிகபட்ச சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமான 2.23% முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மிகக் குறைந்த சராசரி வருடாந்த வளர்ச்சி வீதமானது வவுனியா மாவட்டத்தில் 0.01% ஆகப் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு நகரில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் விடுதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(30.10.2025) காலை மீட்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த குறித்த நபர் தேர்தல் திணைக்களத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கடமையாற்றிவந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் எருவில் பகுதியை சேர்ந்த 35வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிவான் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளன.
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசியப் பிராந்தியத்தில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பின் வேகம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் இலங்கையில் வயதான மக்கள் தொகை 12% ஆக இருந்தது என்றும், அது 2024 ஆம் ஆண்டில் 18% ஆக உயர்ந்துள்ளது என்றும் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் நிஷாணி உபயசேகர, குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேலும் கூறியதாவது,
“இலங்கையில், 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12% ஆக இருந்தனர். 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், வயதான சமூகம் 18% ஆக உயர்ந்துள்ளது. 2040 ஆம் ஆண்டளவில் இந்த மக்கள் தொகையில் 25% பேர், அதாவது நான்கு பேரில் ஒருவர் வயதானவராக இருப்பார்கள் என்று நாங்கள் முன்னறிவித்துள்ளோம்.
ஆசியாவில் உள்ள ஒத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வயதான மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் அதிகமாக உள்ள நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குக் பிறக்கும்போதே ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரித்ததும், புதிய பிறப்புகளின் எண்ணிக்கை குறைவதுமே முக்கிய காரணங்களாகும்.”என்றார்.
வவுனியா – செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்த மூவரும், புதன்கிழமை (29) அன்று அதிகாலை 12.37 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து 6E-1175 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம், 3வது தொகுதி முகவரிகளில் வசிக்கும் 27 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட மூவரும் புதன்கிழமை (29) அன்று சுமார் 04.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் பலத்த பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
அண்மையில் கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
ஆறு வயது சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில் குதிரை கையாளுபவர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியை தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குதிரை மற்றும் குதிரை கையாளுபவர் நேன்று (29.10.2025) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்டவரின் தந்தை கறுவாத்தோட்டம் பொலிஸாரில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைப்பாட்டின்படி, ஒக்டோபர் 26ஆம் திகதி, குறித்த தந்தை தனது இரண்டு மகள்களுடன் பொழுது போக்கிற்காக விகாரமஹா தேவி பூங்காவிற்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், மகள்மார் மாறி மாறி ஒரு குதிரையில் சவாரி செய்தனர். இறுதிச் சுற்றில், சந்தேகநபர் சிறுமிகளில் ஒருவரை தவறான முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைக் கண்ட தந்தை உடனடியாக தனது மகளை அழைத்துச் சென்று பொலிஸில் முறையிட்டுள்ளார். இதனையடுத்தே, பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும், சந்தேகநபரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் செய்யவில்லை என்றும், சவாரியின் போது சிறுமி குதிரையிலிருந்து விழுவதைத் தடுக்க மட்டுமே அவரை தொட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் செல்ல அனுமதித்துள்ளார்.