தடை செய்யப்பட்ட ”பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம்” இன்று(14) ஆரம்பமாகின்றது.
“பெருங் கவலையின் உச்சகட்டம் – சூழ்ச்சியான பிரமிட் திட்டம்” எனும் தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தினால் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முப்படையினர், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தௌிவூட்டப்படவுள்ளனர்
நாடளாவிய ரீதியில் 6,172 பாடசாலைகள் மற்றும் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஊடாக குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நிதி மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு நிதியியல் கட்டமைப்பு தொடர்பில் உறுதிப்பாட்டை பேணுதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்
இன்று(14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பிரமிட் எதிர்ப்பு தேசிய வாரம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
வவுனியாவில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முற்பட்ட மாநகர சபையினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.
வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் கொரோனாவிற்கு பின்னரான காலப் பகுதியில் அதிகளவான நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்திருந்த நிலையில் வவுனியா மாநகர சபையினால் அதனை அகற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்துக்கு இடையூறாகவும் மக்கள் நடமாடுவதற்கு இடையூறாகவும் குறித்த நடைபாதை வியாபாரம் காணப்படுவதாக தெரிவித்து மாநகர சபையினால் இதனை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக மாநகர முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக குறித்த நடைபாதை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது அங்கு வருகை தந்த மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடைபாதை வியாபாரத்தை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
நீண்ட நேரமாக வியாபாரிகளுக்கும் பொலீசார் மற்றும் மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதோடு முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தது. சபை முதல்வர் கெளரவ காண்டீபன் அவர்கள், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததால் இனி கால அவகாசம் வழங்க முடியாது என உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
எனினும் அதன் பின்னரும் சில வியாபாரிகள் முரண்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இறுதியாக வீதியோரத்தில் போடப்பட்டிருந்த சகல தற்காலிக கொட்டகைகளும் அகற்றப்பட்டது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை வர்த்தக நிலையங்களே இவ்வாறு மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கு காணப்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.
மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வந்த நிலையில், ஏலவே பொது அறிவித்தல் வழங்கப்பட்ட போதும் கருத்தில் எடுக்காது சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் கூட்டம் நேற்று (12.07.2025) அநுராதபுரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சீர்திருத்தங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் முதல் படியாக அனைத்து பாடசாலைகளிலும் தரம் 01 முதல் 06 வரையுள்ள வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
தரம் 01 முதல் 06 வரை வகுப்புகளில் இந்த திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், நேரம் மாற்றம் மற்றும் பாடத்திட்ட முறைகள் குறைப்பு அனைத்து தரங்களுக்கும் பொருத்தமானதாகும்.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகம் அறிந்திருக்க வேண்டும். எவ்வாறு காலத்தை ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த வருடமே நாம் ஒரு இலட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
இதில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பிரதமர் ஹரினி அமரசூரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் அரச உத்தியோகத்தர் ஒருவர் இன்று (13) மாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தாபன நடைமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகம் செய்த கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை வேண்டும்.
அரச உத்தியோகத்தர்களது கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு அரச உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
புதிய கல்வி சீர்திருத்த செயல்முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றிற்காக திருகோணமலையில் உள்ள மாகாண கல்வி அமைச்சிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக குறித்த உத்தியோகத்தர் தனிமனித போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதேவேளை வடக்கிலும் அதிகாரிகளின் நிர்வாக பழிவாங்கல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், முறைதவறிய இடமாற்றங்களால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களும் இத்தகைய போராட்டங்களை நடாத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 பிராந்திய வைத்தியசாலைகள் இருப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்துரைத்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும் தெரிவித்தார்.
மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகி விட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ் வைத்திய சாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார்.
இது போன்ற தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயம் என்றும் அவர் கூறினார்.
சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், “வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன, எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சகம் பலவீனமாக உள்ளது.
எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வழங்கும் போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், வைத்திய சாலைகளில் நோயாளர் காவு வண்டிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாட, முறைப்பாட்டாளர் தீர்மானித்துள்ளார்.
தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக, முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல் துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலசந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் போது, சரணடைந்தவர்கள், சட்ட விரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரண தண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காண முடிகிறது.
அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதம் ஏந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன.
இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க் குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான் திகதி அறிவித்துள்ளார்
சம்பவ இடத்துக்கு இன்று கள விஜயம் மேற்கொண்ட வவுனியா நீதவான், கள விசாரணைகளை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், உயிரிழந்த பொதுமகனின் உடலத்தில் எவ்வித வெளிப்புற காயங்களும் இல்லை என நீதவான் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.
இந்தநிலையில், சட்ட மருத்துவ அதிகாரியின் ஊடாக, உடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனையை எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளுமாறு நீதவான் காவல் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த 59 வயதான பொதுமகனின் உடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா – கூமாங்குளம் பகுதியில் பொதுமகன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்ததை அடுத்து அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது, காயமடைந்ததாகக் கூறப்படும் ஐந்து காவல்துறையினரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில், இருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வவுனியா தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி கூறினார். ஏனைய மூவரும், சாதாரண காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிராம மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 வருடங்களில் 2 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இளைஞர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 58 சபைகளில் போட்டியிட்டது. இதில் 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.
ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம். மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46இல் எமது இலக்கை அடைந்துள்ளோம்.
மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம். இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றி என அக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பெருமிதப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், 58 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளதாக பொதுவாக கூறும் சுமந்திரன் வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் மூவினங்களும் வாழ்கின்ற நிலையில், வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கைப்பற்றிய போதும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியினால் ஏன் ஒரு சபையைக் கூட கைப்பற்ற முடியவில்லை?
இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் 3 மாவட்டங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், தனித் தமிழரசின் ஆட்சி அமைக்கும் விதத்தில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த கிளிநொச்சிக்குத் தலைமை வகிக்கும் சிறீதரன் எம்.பி, முல்லைத்தீவிற்குத் தலைமை வகிக்கும் ரவிகரன் எம்.பி, மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் ஆகியோருடன் தமிழரசின் தலைமை வன்மம் கொண்டு மூவரையும் பழிவாங்கும் நோக்குடனும் கட்சியிலிருந்து ஒதுக்கும் வெளியேற்றும் திட்டத்துடனும் செயற்படுவது தமிழரசின் அரசியலையே முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்பதனை தமிழரசின் தலைமைகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
தமிழரசு வெற்றி கொண்ட முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் தான் பெயரிடுபவர்களையே தவிசாளர்களாக பிரதி தவிசாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற சுமந்திரனின் சர்வாதிகாரத்தால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தலைமை தாங்கி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரவிகரன் எம்.பி மற்றும் மன்னாரிற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் எம்.பி சாள்ஸ் அந்தப் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து ஒதுங்கியுள்ளார்.
தற்போதைக்கு தமிழரசுக்கு நெருக்கடிகள் ஏற்படாது விட்டாலும் இனி வரும் தேர்தல்களில் அதற்கான விளைவுகளைத் தமிழரசு கட்சி எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
அதேபோன்று, சிறீதரன் எம்.பியின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசின் ஆட்சியமைந்த கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள சிறீதரனின் தீவிர விசுவாசியை அப்பதவியிலிருந்து அகற்றத் தமிழரசின் தலைமை திட்டமிட்டுள்ளது.
இது அந்த தவிசாளருக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழரசுக்குள் இருந்து கொண்டே தமிழரசின் தமிழ்த் தேசிய விரோத செயற்பாட்டைக் கடுமையாக எதிர்க்கும், பகிரங்கமாக விமர்சிக்கும் சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவே தமிழரசின் தலைமையால் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே ஏலவே பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல ஆசனங்களை இழந்துள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும், பல சபைகளை இழந்துள்ள தமிழரசுக் கட்சி, தன்னை மீண்டும் வலிதாக்கிக் கொள்ள கட்சிக்குள் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பலப்படுத்தி அனைவரையும் ஒரே வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டுக் கொடுப்புத் தன்மைகளுடன் தமிழரசின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
எனினும் இந்த நேரத்தில் தலைக்கனம், வறட்டுக் கெளரவம், பிடிவாதம், நான் என்ற அகங்காரம் போன்றவற்றால் கட்சிக்குள் பிளவுகளை, குழப்ப நிலைகளை, பழிவாங்கல்களை, பதவி நீக்கங்களை, கட்சி நீக்கங்களை மேற்கொண்டால் தமிழர்களின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி விரைவில் காணாமல் போய்விடும் என்பதனை தமிழரசின் புதிய தலைமைகள் சற்றேனும் தமிழர் நலன் சார்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
தவறின், தந்தை செல்வா, “கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது” என்று கூறியதை “கடவுளாலும் தமிழரசுக் கட்சியை காப்பாற்ற முடியாது” என்று கூற வேண்டிய நிலையே ஏற்படும்.